திண்டுக்கல் மாவட்டம் பழனியில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் விழாக்களான தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விழாக்களை எவ்வாறு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவது என்பது பற்றி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழா துவங்கும் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக தீயணைப்பு, மருத்துவம், காவல்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும்.
பல ஆண்டுகளாக நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்களும் பங்கேற்று விழாவிற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தங்கள் துறை சார்ந்து எடுத்துள்ள அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்குவார்கள்.
ஆனால், இக்கூட்டத்தில் ஒருமுறை கூட மாற்றுத்திறனாளிகள் துறையை சேர்ந்த அலுவலர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால், ஒவ்வொரு விழாவிலும் பங்கேற்கும் பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படையான வசதிகள் குறித்து பேசுவதற்கும் அதற்க்கான ஏற்ப்பாடுகளை செய்வதற்கும் வழிவகை இல்லாமல் இருந்தது.
மாற்றுத்திறனாளி பக்தர்கள் எளிதாக விழாவில் பங்கேற்கவும் சுவாமி தரிசனம் செய்யவும் சிறப்பு வசதிகளான வீல்சேர் வசதி, வெஸ்டர்ன் கழிப்பறை வசதி, கைப்பிடியுடன் கூடிய சாய்வுதள வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துதர முடியாத காரணத்தால் விழாவில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்து வந்தார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இக்கூட்டத்தில் எங்களது துறையை சேர்ந்த அலுவலர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என்றும், இதனால் மாற்றுத்திறனாளி பக்தர்களின் சிரமங்களை குறைக்க முடியும் என்றும் வலியுறுத்தியதன் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததன் அடிப்படையிலும் 05.03.19 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பங்குனி உத்திர திருவிழாவை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த அதிகாரிகளையும் அழைத்துள்ளனர்.
இது சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். விழா தயாரிப்பு ஆலோசனை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை முதல்முறையாக பங்கேற்க வைத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.