ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் (George Elwood Smith) மே 10, 1930ல் ஸ்மித் வைட் பிளைன்ஸ், நியூயார்க்கில் பிறந்தார். ஸ்மித் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றினார். இவர் தனது இளநிலை பட்டத்தை 1955ம் ஆண்டு பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை 1959ல் சிகாகோ பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவரது ஆய்வேடு வெறும் மூன்று பக்கங்களை மாத்திரம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஸ்மித் முர்ரே ஹில், நியூ ஜேர்சியிலுள்ள பெல் ஆய்வுகூடத்தில் 1959ம் ஆண்டிலிருந்து 1986ல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். இங்கு அவர் புதிய லேசர் கதிர்கள் மற்றும் குறைகடத்திச் சாதனங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். தமது பதவிக்காலத்தில், பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றார். மேலும் அவர், பேரளவு ஒருங்கிணைச் சுற்று (VLSI) சாதனப் பணியகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
1969ல் ஸ்மித்தும் பாயிலும் சேர்ந்து மின்மம் வழிந்துநகர் கருவியைக் (charge-coupled device, CCD) கண்டுபிடித்தார். இதற்காக இவ்விருவரும் 1973ல் பிராங்க்கிலின் கழகத்தின் (Franklin Institute), இசுட்டூவர்ட் பாலன்ட்டைன் பதக்கம் (Stuart Ballantine Medal) பெற்றார்கள். 1974ல் ஐ.இ.இ.இ நிறுவனத்தின் மாரிசு லீபுமன் நினைவுப் பரிசும் (IEEE Morris N. Liebmann Memorial Award), 2006ல் டிரேப்பர் பரிசும் (Charles Stark Draper Prize), 2009ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்கள். ஸ்மித்தும் பாயிலும் கடற்ப்பயணத்தில் ஆர்வமுடையோராவர். இவர்களிருவரும் இணைந்து பல பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஓய்வுபெற்ற பின்னர் தனது வாழ்க்கைத்துணையான ஜெனட்டுடன் பதினேழு வருடங்கள் உலகம் முழுவதும் பயணித்தார். எனினும் 2003ம் ஆண்டின் பின்னர் எலும்புச் சிதைவினால் தனது பொழுதுபோக்கான பயணம் மேற்கொள்ளலை நிறுத்திக் கொண்டார். இவர் தற்போது வார்டவுன், நியூ ஜேர்சியில் வசிக்கிறார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.