திமுக
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இம்முறை 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், ஈரோடு, பெரம்பலூர், தேனி, கோவை, ஆரணி ஆகிய 5 தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கைப்பற்றி தானே போட்டியிடுகிறது
திமுக. அதற்கு பதிலாக கடந்த முறை போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளை காங்கிரசுக்கும் விட்டுக்கொடுத்துள்ளது.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆரணி, தேனி தொகுதிகளை திமுக.,வுக்கும், திருச்சியை மதிமுக.,வுக்கும் விட்டுக்கொடுத்து, அதற்கு பதிலாக திமுக வசமிருந்த கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளை பெற்றுக்கொண்டது.
மா.கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2019ல் போட்டியிட்ட கோவை தொகுதியை திமுக.,விடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு பதிலாக திமுக போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியை பெற்றது.
மதிமுக
மதிமுக கடந்த தேர்தலில் திமுக.,வின் உதயசூரியன் சின்னத்தில் ஈரோடு தொகுதியில் நின்றிருந்தது. அந்த தொகுதியை தற்போது திமுக.,விடம் கொடுத்துவிட்டு, காங்கிரசிடம் இருந்த திருச்சி தொகுதியை கேட்டு பெற்றுள்ளது. அதில் தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.
அதே தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் தான் தற்போதும் போட்டியிடுகின்றன.
மநீம.,வுக்கு ராஜ்யசபா
திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு லோக்சபாவில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. மாறாக, அக்கட்சிக்கு 2025ல் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.