இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் (நவ.11) தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.தேச தந்தை மகாத்மா காந்தி இவரை “கல்வி பேரரசு” என குறிப்பிட்டுள்ளார்.எழுத்தறிவின்றி ஒரு குடிமகன் இருந்தாலும், அந்நாடு உண்மையான மக்களாட்சி பெற்றதாகாது என்பது மெளலானா ஆசாத்தின் கருத்தாக உள்ளது.மெளலானாவின் முழுப்பெயர் மெளலானா அபுல் கலாம் முஹ்யித்தீன் அகமது ஆசாத் ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1947 ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சராக அபுல் கலாம் ஆசாத் பொறுப்பேற்றார்.உலக நாடுகளுக்குச் சவால் விடும் வகையில், இந்திய கல்வியில் பெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் கொண்டு வந்தார். தற்போது மிகப்பெரும் கல்வி நிறுவனமாக பேசப்படுகிற இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தொழிலியல் ஆராய்ச்சி மையம் (CSIR), பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உருவாகுவதற்கு இவராலே அடித்தளமிடப்பட்டது.1947 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற அபுல் கலாம் ஆசாத், 1958 ஆம் ஆண்டு தான் மறையும் வரையில் பணியாற்றினார். இந்தியாவில் அதிக காலம் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்த பெருமை இவருக்கு உண்டு. அபுல் கலாம் ஆசாத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், கடந்த 2008 ஆம் செப்டம்பர் 11 ஆம் தேதி, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவித்தது.இதனையடுத்து 2008 முதல் இன்று வரையில், ஒவ்வொரு ஆண்டும் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11 ஆம் தேதி, தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.கல்விக்கு மட்டுமின்றி இந்திய மக்கள் சாதி, மத வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் இருக்கவும் அபுல் கலாம் ஆசாத் அரும்பாடுபட்டார். நாளும் பொழுதும் நாட்டிற்காகவே அர்பணித்தார். நல்ல நினைவாற்றல் கொண்டவர். சாகித்திய அகாடமி, லலித் கலா அகாடமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை தோற்றுவித்தார். கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.கல்வித்துறையில் மட்டுமின்றி சுதந்திரப் போராட்டத்தில், சமூக முன்னேற்றத்தில், அரசியல் களங்களில், இதழியல் துறையில், மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ஒட்டு மொத்தத்தில் நம் இந்திய நாட்டின் அனைத்து வளர்ச்சிகளிலும் உறுதுணையாக இருந்த மௌலானா முஹ்யித்தீன் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி தமது 69 ஆம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்
9
You must be logged in to post a comment.