வால்டெமர் பவுல்சன் (Valdemar Poulsen) பவுல்சன் நவம்பர் 23, 1869ல் கோபனாகனில் பிறந்தார். பவுல்சன் டென்மார்க்கைச் சேர்ந்த பொறியியலாளர். 1898 இலேயே எஃகுக் கம்பிகளில் ஒலியைப் பதிவித்து மீண்டும் கேட்கமுடியும் என்று முதன் முறையாகச் செய்து காட்டியவர். இந்நிகழ்வு அண்மைக் காலத்தில் ஒலிநாடாவில் பதிவுசெய்யத் தொடங்கும் முன்னதாக முதன் முதலாக ஒலிப்பதிவை எஃகுக் கம்பியில் காந்தப்புலம் வழி பதிவு செய்து வழியமைத்துத் தந்த முதல் நிகழ்வு. இரும்பிக் கம்பிகளில் முதன்முதலாக 1899 இல் ஒலிப்பதிவு செய்து காட்டியவர். 1900ல் பாரிசில் நடந்த தொழில்நுட்பக் கண்காட்சியில் முதன்முதலாக தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். பெரிய உருளையில், இரும்புக்கம்பியைச் சுற்றி, அதில் ஒலியை மின்காந்த மாற்றத்தால் பதிவுசெய்து, மீண்டும் ஒலியாக மாற்றிக்காட்டியது, ஒலிப்பதிவின் தொடக்கம்.
வால்டெமர் பவுல்சன் கண்டுபிடிப்பை அமெரிக்கப் புத்தாக்குநர் பதிவகத்தில் காப்புரிமம் எடுத்தும் பதிவு செய்துள்ளார். பவுல்சனுக்குப் பிறகு பீடர் ஓ.பீடர்சன் (Peder O. Pedersen) இவர் கருத்தைப் பின்பற்றி பிற காந்த ஒலிப்பதிவுக்கருவிகளைக் கண்டுபிடித்தார். இவை எதுவும் ஒலியைப் பதிவு செய்வதிலோ, மீள்விப்பதிலோ மிகைப்பிகள் (amplifier) பயன்படுத்தவில்லை. 1900ல் பாரிசில் நிகழ்ந்த உலகக் கண்காட்சியில் பவுல்சன் தன் ஒலிப்பதிவியைக் காட்டியபொழுது ஆத்திரியப் பேரரசர் ஃவிரான்சு யோசஃவு (Franz Josef) அவருடைய குரலைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றார். இதுவே உலகில் மிகப் பழையதாக செய்த, இன்று கிடைக்கும் ஒலிப்பதிவாகும்.
இரும்பிக் கம்பிகளில் முதன்முதலாக ஒலிப்பதிவு செய்த வால்டெமர் பவுல்சன் ஜுலை 23, 1942ல் தனது 72வது அகவையில் ஜென்டோஃப்டே, டென்மார்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1969ல் பால்சனின் நினைவாக ஒரு முத்திரை வெளியிடப்பட்டது. வால்டெமர் பவுல்சன் தங்கப் பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் வானொலி நுட்பங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் சிறந்த ஆராய்ச்சிக்காக டேனிஷ் தொழில்நுட்ப அறிவியல் அகாடமியால் வழங்கப்பட்டது. இந்த விருது அவரது பிறந்த நாளான நவம்பர் 23 அன்று வழங்கப்பட்டது. மேலும் 1939 ஆம் ஆண்டில் தொடக்க விருதை பவுல்சன் பெற்றார். இந்த விருது 1993ல் நிறுத்தப்பட்டது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
You must be logged in to post a comment.