“ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும்; ஆனால், அந்த மாற்றம் மீண்டும் கள்ளர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தும் மாற்றம் அல்ல. இப்போது ஏற்படும் மாற்றம், நாட்டினை ஆரோக்கியமாக மாற்றுவதற்காக இருக்க வேண்டும்” என, இலங்கை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். “தங்கள் தேர்தல் நடவடிக்கை என்ன..?” என்று, இலங்கை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள அனுரகுமார திசாநாயகவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கத்தில்தான் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய ஆட்சி ஒன்றினை உருவாக்க முயற்சிக்கின்றனர்.ஆனால், மக்கள் ஒவ்வொரு தடவையும் ஆட்சியை மாற்றிய போதிலும் மாற்றத்தின் பலன் கிடைக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும்; ஆனால், அந்த மாற்றம் மீண்டும் கள்ளர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தும் மாற்றம் அல்ல.இப்போது ஏற்படும் மாற்றம் நாட்டினை ஆரோக்கியமாக மாற்றுவதற்காக இருக்க வேண்டும். அதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கான மாற்றமாக அதனை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.பிரதான இரண்டு வேட்பாளர்களும் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளனர். இனியும் இவர்களின் வாக்குறுதிகளை நம்பினால் மக்களே விளைவுகளை சந்திக்க நேரிடும்.ஆகவே, மாற்றம் ஒன்றினை உருவாக்குவோம்; அது, நம்மை நாமே ஆளும் ஜனநாயக மாற்றமாக இருக்க வேண்டும். அதற்காக, எங்களுடன் மக்கள் கைகோர்க்க முன்வருவார்கள்” என்று அவர் கூறினார்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
You must be logged in to post a comment.