அத்தி வரதர் வைபவத்தின்போது, எனது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டது. எனவே, எனக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிடம் உள்ளூர்வாசி ஒருவர் மனு அளித்துள்ளார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல், ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்தி வரதர் வைபவம் நடந்தது.இதன்போது, பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோயிலைச் சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் வந்தன. இதனால், வெளியே சென்று வீடு திரும்புவது உள்ளிட்டவற்றால் தெருவாசிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் சேதுராயர் தெருவைச் சேர்ந்த கோ.ரவி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘அத்தி வரதர் வைபவத்தின்போது, அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தேன்; வேலைக்குகூட செல்ல முடியவில்லை.வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதுபோல் ஒரு உணர்வு இருந்தது. இது, மனித உரிமை மீறல். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, இந்து சமய அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும்தான் காரணம். எனவே, நஷ்ட ஈடாக எனக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
6
You must be logged in to post a comment.