மத்திய மாநில அரசுகளின் ஹைட்ரோகார்பன் (பேரழிவு) திட்டத்தால் பாலைவனத்தை நோக்கி நகரும் தமிழகம்
கலாச்சாரத்தின்சுவடுகளையும்,இயற்கைவளங்களின் பங்களி ப்பையும் பெரும்பான்மையாக கொண்டுள்ள தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு அழிக்கும் விதமாக பேரழிவு திட்டங்கள் தமிழகத்தினுள் நுழைவதை காண முடிகிறது.குறிப்பாக ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணு உலை விரிவாக்கங்கள், எட்டு வழி சாலை,ஸ்டெர்லைட் விரிவாக்கம், பாக்ஸைட் எடுப்பு, எரிவாயு குழாய் பதிப்பு,சாகர் மாலா, பாரத் மாலா போன்ற எண்ணற்ற பேரழிவு திட்டங்கள் தமிழகத்தில் புகுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான பேரழிவு திட்டங்களை தடுக்கவும், தடை விதிக்கவும் கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 34,000க்கும் மேற்பட்ட போராட்டங்களை சமூகசெயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் என தங்களின் வாழ்வாதார வரவினை மறந்து வாழ்வதற்காக தினசரி போராட்டங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவது என்பது மத்திய மாநில அரசுகளுக்கு தலைகுனிவான ஒன்றாகும்.
அரசியல் ஆட்சியமைப்பில் எந்த மாற்றம் வந்தாலும் பேரழிவு திட்டங்கள் முலம் திட்டமிட்டு அழிக்கும் நடைமுறை என்பது மட்டும் தமிழகத்தில் தொடச்சியாக தொய்வின்றி அரங்கேற்றப்பட்டு வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.காவிரி,பென்னை,பாலாறு, வைகை, தாமிரபரணி என ஆற்றுப்படுகையை மையமாக கொண்டு உலகிற்கே உணவளிக்கும் தமிழகத்தின் உணவு உற்பத்தியானது தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு திட்டங்களாலும், மத்திய அரசின் திட்டமிட்ட தனியார் தாரை வார்ப்பினாலும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் பாலைவனமாக மாறி வருவதை நம்மால் காண முடிகிறது.
இனி வரும் காலங்களில் நமது வாழ்வாதார சூழலை காக்கவும், வருங்கால இளம் தலைமுறை சந்ததியினர்களை பாதுகாக்கவும் ஒன்றுபட்டு மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதோடு, மத்திய மாநில அரசுகளுக்கு அதிகப்படியான அழுத்தங்களை கொடுத்து திட்டமிட்டு தமிழகத்தில் புகுத்தப்படும் பேரழிவு திட்டங்களை தடுத்திட முன்வர வேண்டும் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மேலும் மத்திய அரசானது வரி வாய்ப்பிற்காகவும், வருமான பெருக்கத்திற்காகவும் தமிழக மக்களை வாட்டி எடுக்காமல் வாழ்வதற்கான திட்டங்களை செயல்படுத்தி பேரழிவான நடைமுறைகளை தவிர்க்க வேண்டும் என்பதே முழுமையான தமிழகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.