சென்னை ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷன் சார்பாக 09.04.2017, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலை விழா 2017 என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ட் ஆஃப் பீஸ் குழும பொதுச்செயலாளர் பொறியாளர் கீழை. இர்பான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை மாணவர்கள் யஹ்யா மக்பூல், ஈஸா அல் ஹனி ஆகியோர் இறைவசனம் ஓதி துவக்கி வைத்தனர்.
ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஷாமிலா அவுக்கார் பாத்திமா வரவேற்புரையாற்றினார். விழாவின் நோக்கம் குறித்தும், ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷனின் கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் அதன் தலைவர் ஹுஸைன் பாஷா அறிமுகவுரையாற்றினார்.
பிளாக் அண்டு ஒயிட் இண்டர்நேஷனல் டூர்ஸ் நிறுவனத்தின் மதுரை கிளையின் மேலாளர் முஹம்மது பக்ருதீன், மீடியா 7 நிறுவனத்தின் இயக்குநர் கோவை தங்கப்பா, கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளியின் தலைமை அறங்காவலர் முஹம்மது சுலைமான், ஸ்கைலிட் லேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முஹம்மது இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகிழ்வாய் மனமே! என்ற தலைப்பில் அறிவரங்கமும், ‘பிம்பம்’ என்ற குறும்பட துவக்க நிகழ்ச்சியும், ‘நாளை..?’ என்ற ஆவணப்பட துவக்க நிகழ்ச்சியும், உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியும், சமாதான ஆளுமை விருது வழங்கும் நிகழ்ச்சியும் சமாதானக் கலை விழாவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுபாஷ் பிம்பம் குறும்படத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரும், தமுமுக-வின் மூத்த தலைவருமான செ. ஹைதர் அலி நாளை..? என்ற ஆவணப்பட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முதன்மைத் துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் மகிழ்வாய் மனமே! அறிவரங்கத்தின் இறுதியாக சிறப்புரையாற்றினார்.
திரைப்படத் தயாரிப்பாளர் அ.ஃபக்ருதீன் திரைப்படத் துறையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட முஸ்லீம்களின் பங்களிப்பு அவசியம் என்பதைக் குறித்து உரையாற்றினார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம். ஸலாஹுதீன் உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக எடுத்துரைக்கும் திரைப்படத்தைக் குறித்து உரையாற்றினார்.
சமூகத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவது எப்படி என்பதை பொறியாளர் அப்துல் சமது, கீழை ஹஸன், புத்தாநத்தம் காஜா மைதீன் அஹ்சனி ஆகியோர் தங்களது துறைசார்ந்த கருத்துக்களுடன் எடுத்துரைத்தனர். சமூக ஒற்றுமை மேம்பாட்டிற்காக வழங்கப்படும் சமாதான ஆளுமை விருதை, புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் தோழர் கோ.சுகுமாரனுக்கு ஆர்ட் ஆஃப் பீஸ் குழும தலைமை ஆலோசகர் எஸ்.என். சுல்தான் வழங்கி கௌரவித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையிலும், 2016-ம் ஆண்டு கோவையிலும் சமாதானக் கலை விழா சிறப்பாக நடத்தப்பட்டு, அதில் கலந்துக்கொண்டு மக்கள் பயனடைந்ததைப் போன்று இந்த விழாவிலும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். விழாவின் தொடக்கத்தில் கராத்தே கலீல் குழுவினரின் அட்டகாசமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஊடக ஒருங்கிணைப்பு பணிகளை மீடியா 7 வெப் டிவி மற்றும் ரைட் பிரதர்ஸ் மீடியா நிறுவனத்தினர் செய்திருந்தினர். ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவின் நிகழ்வுகளை மீடியா 7 சேனலின் பல்வேறு தளங்களில் நேரலையில் கண்டு மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை ஆர்ட் ஆஃப் பீஸ் குழுமத்தைச் சார்ந்த முஹம்மது ஆசிப், சான்கான், பைரோஸ்கான், சான்பாஷா உள்ளிட்டவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷனின் பொருளாளர் முஹம்மது ஹனிஃபா விழாவின் இறுதியில் நன்றியுரையாற்றினார். பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த விழா தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட வேண்டும் என்று விழாவில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.