கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 5 போலி டாக்டர்கள்: ஐந்து நபர்களையும் கைது செய்து அதிரடி நடவடிக்கை..
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தானிப்பாடி பகுதியில் கொரோனாவுக்கு 5 போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து மருந்து கொடுப்பதாக புகார் வந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மற்றும் தானிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமாரசாமி, நசுருதீன் தலைமையிலான போலீசார் 5 போலி டாக்டர்களின் வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 5 பேரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆங்கில மருந்துவம், சித்த மருத்துவம் உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை வைத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (வயது45), உத்திரகுமாரன் (39), கண்ணன் (36), ஏழுமலை (39), அருவங்காட்டை சேர்ந்த மதலை முத்து (58)ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கடந்த சில நாட்களாக தானிப்பாடியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். சளி, இருமல், காய்ச்சல் என கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கும் மருந்து, மாத்திரைகள் கொடுத்தும், குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலி டாக்டர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.