தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு..
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 19.03.2024 அன்று தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூன்று இலட்சம் வாக்காளர்களின் கையெழுத்து பெறும் மாபெரும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே.கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணிகள், மனித சங்கிலி, கல்லூரி மாணவர்களுக்கான (முதல் வாக்காளர்கள்) விழிப்புணர்வு முகாம்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து மூன்று இலட்சம் வாக்காளர்களின் கையெழுத்து பெரும் மாபெரும் முகாம் 19.03.2024 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 13,36,956 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து முகாம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் மகளிர் திட்ட சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக நடைபெறும். எனவே வாக்காளர்கள் வருகின்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நாள் அன்று 100 சதவீதம் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் இரா. மதி இந்திரா பிரியதர்ஷினி, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் நரசிம்மன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பத்மாவதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மாலதி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் V.M. சிவக்குமார், M.மாரீஸ்வரன், E.சாமத்துரை, பொ.டேவிட் ஜெயசிங் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.