“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வீ.கே.புதூர் தாலுகாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வீரகேரளம்புதூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள், ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து, 19.06.2024 அன்று தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறையினையும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டம் 2023-2024 ஆம் ஆண்டின் மூலம் ரூ.232 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தினையும், துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும் விவசாய பொருட்களையும். அங்கன்வாடி மையத்தில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், சுரண்டை அரசு பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தினை பார்வையிட்டு பொதுமக்களிடம் கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பதனையும் கேட்டறிந்து, சார்பதிவாளர் அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்து, கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளனவா என்பதை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சுரண்டை நகராட்சி அலுவலகத்தினை பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்து, வேளாண்மை கூட்டுறவு வங்கிக் கோப்புகளையும் ஆய்வு செய்து, தீயணைப்பு அலுவலகத்தினையும், கிராம நிர்வாக அலுவலகத்தினையும், ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்து பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை கேட்டறிந்து சுரண்டை காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாடியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரூ.9.98 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்தினையும், மகளிர் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.13.63 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஊரணியினையும், வெள்ள நிவாரண நிதி 2024-2025 ஆம் ஆண்டு மூலம் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகளையும், ஆர்.சி.நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வீரகேரளம்புதூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.கமல் கிஷோர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, சுரண்டை நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், சுரண்டை சார்பதிவாளர் இளங்கோ, ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், மாரியப்பன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்