பிரபல பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்; சுரண்டையில் பரபரப்பு..
சுரண்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு திடீரென அதிகாரிகள் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் நகராட்சிக்கு கடந்த 2008 ஆம் வருடம் முதல் செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ 2,90,840, செலுத்தவில்லை. இது குறித்து நகராட்சி தரப்பில் பல முறை அறிவிப்பு வழங்கியும் கட்டாததால் இன்று காலையில் நகராட்சி மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் வினோத் குமார், வருவாய் உதவியாளர்கள் நாகூர் மீரா, பிள்ளை அன்னாவி, மாடசாமி, அங்கு சாமி, பிட்டர் முருகன் மற்றும் அலுவலர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைக்க சென்றனர். இதனால் பிஎஸ்என்எல் சேவைகள் அனைத்தும் தடைபடும் சூழல் உருவானது.
அப்போது அங்கு இருந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்தோணி வியாகப்பன் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சொத்து வரி தொகையை செலுத்த இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைக்காமல் சென்றனர். இச் சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.