திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கம் மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர் ஜி.அரவிந்தன் தலைமையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.செங்கம் கல்வி மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடந்தவாரம் கல்வி இணை செயல்பாடுகள் கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் பாரத சாரண இயக்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் முன்னிலையில். நடைபெற்றதன் அடிப்படையில் செங்கம் ஒன்றியத்தில் பல்வேறு நிலைப் பள்ளியில் பாரத சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தொடர்ந்து கொட்டாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரத சாரணர் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர் உதய குமார் முன்னிலை வகித்தார் விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் அரவிந்தன் தொடங்கி வைத்து புதியதாக சேர்ந்த 24 சாரண சாரணிய மாணவர்களுக்கு கழுத்துப் பட்டை, சீருடையையும் வழங்கி பேசுகையில்; சாரண இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிரதி பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவதாகும்.மேலும் இது, உற்று நோக்குதல், அறிவுத் திறனை வளர்த்தல், கைவினைப் பொருள்கள் செய்தல் போன்ற இதர திறமைகளையும் வளர்க்கிறது. சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், மாறாப் பற்றுடையவர்களாகவும், மரியாதை உடையவர்களாகவும், பிறரைச் சகோதரர்களாக நேசிக்கும் பண்புடையவர்களாகவும், இயற்கையை நேசிப்பவர்களாகவும், விலங்குகளிடம் அன்பு காட்டுபவர்களாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவும், பொதுவுடமைகளைப் பாதுகாப்பவராகவும், சிக்கனமானவர்களாகவும், எண்ணம், வாக்கு, செயல்களில் தூய்மை உடையவர்களாகவும் விளங்குவார்கள். சாரண, சாரணியர்களுக்குப் பல்வேறு வகையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதை மாணவர்கள் அனைவரும் பெற வேண்டும் என்றார்.சாரண இயக்கம் பற்றிய வரலாறு அதன் செயல்பாடுகள் பற்றியும் மாவட்ட அமைப்பு ஆணையர் வி. ஆர் .அன்பழகன், மாவட்ட பயிற்சி ஆணையர் அ.பாலகுமார் விளக்கமாக எடுத்துக் கூறினார். பள்ளி ஆசிரியர்கள் செல்வி, இந்துமதி , காயத்ரி, சாரண சாரணிய இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்
13
You must be logged in to post a comment.