இராமநாதபுரம் நடமாடும் விற்பனை சேவை மூலம் ரூ.100 மதிப்பிலான காய்கறி தொகுப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார். இராமநாதபுரம் நகராட்சி, திருவள்ளுவர் தெரு பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், ரூ.100 அடக்க விலையில் காய்கறி தொகுப்பு விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி விற்பனை சேவையை இன்று (04.04.2020) துவக்கி வைத்தார். அவர் தெரிவித்ததாவது:தமிழக முதல்வரின் உத்தரவின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்த்திடும் நோக்கில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, இராமேஸ்வரம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களும் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனைக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைப்போடு பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே சிரமமின்றி காய்கறிகள் வாங்கிடும் வகையில் நடமாடும் காய்கறி விற்பனை சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்கள் நலனுக்காக ரூ.100 அடக்க விலையிலான காய்கறி தொகுப்பு விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி விற்பனை சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது இராமநாதபுரம் நகரில் பொதுமக்கள் குறைந்த விலையில் தரமான காய்கறிகளை வாங்கிட வழிவகை செய்யப்பட்டள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பியவர்களில் தற்போதைய நிலையில் 2,188 நபர்கள் அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென தெரிவித்தார்.ரூ.100 மதிப்பிலான இந்த காய்கறி தொகுப்பில் அரை கிலோ பெரிய வெங்காயம், அரை கிலோ உருளைக்கிழங்கு, அரை கிலோ கத்திரிக்காய், அரை கிலோ தக்காளி, கால் கிலோ வெண்டைக்காய், முருங்கைக்காய் 2 , 100 கிராம் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். சிக்கல், சாயல்குடி, நரிப்பையூர் ஆகிய பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு கொரோனா உதவித்தொகை
ரூ.1,000 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணிகள், பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்த்திடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி, பழ விற்பனை கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சாயல்குடி அருகே ரோச்மா நகர் சோதனைச் சாவடியில் பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் என்.விஸ்வநாதன், கடலாடி வட்டாட்சியர் பொன்.முத்துக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
23
previous post
You must be logged in to post a comment.