ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் மீனவர்களுக்கு மிதவை கூண்டு மற்றும் கடல் விரால் மீன் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் பிராந்திய நிலைய பொறுப்பு விஞ்ஞானி ஜெயக்குமார் தலைமை வகித்தார்.மூத்த விஞ்ஞானி சக்திவேல் வரவேற்றார். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி 20 மீனவர்களுக்கு, ஐதராபாத் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியம் சார்பில் 60 சதவீத மானியத்தில் மிதவை கூண்டுகள், கடல் விரால் மீன் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.
அவர் பேசியதாவது, மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மிதவை கூண்டுகள் கடலில் நிறுவிய பின்னர், மீன் வளர்ப்பை மேற்கொள்ள அனைத்து தொழில் நுட்ப உதவிகள் மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வழங்கப்படும். 6 முதல் 8 மாதங்களுக்கு பின்னர் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 2.5 டன் முதல் 2.8 டன் கடல் விரால் மீன்கள் அறுவடை செய்வதன் மூலம் ரூ.3 லட்சம் வரை லாபம் பெறலாம் என்றார். இந்திய கடலோரக் காவல் படை கமாண்டிங் அதிகாரி வெங்கடேஷன், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மேலாண் இயக்குநர் முரளிதரன் , விஞ்ஞானிகள், மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மூத்த விஞ்ஞானி தமிழ் மணி நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.