இ-பாஸ் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாவட்ட நிர்வாகம் மக்கள் ஒத்துழைப்போடு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் காய்ச்சல், தொண்டை வலி மற்றும் எரிச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் தன்னிச்சையாக மருந்துகள் உட்கொள்ளாமல் மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது அவசர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04633- 290548 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் அவசர தேவைகளுக்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பயணம் செய்பவர்களுக்கு குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படாது என்ற தவறான தகவல் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான செய்தி ஆகும்.
இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து இறப்பு/ திருமணம்/ மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்களுக்காக இ- பாஸ் கோருபவர்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் உங்களது பகுதியில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வருவோரின் விபரங்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04633- 290548 ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.