ராஜபாளையம் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை சரியாக இல்லை, நான் இறந்து விடுவேன் என்று வாட்ஸ் ஆப்பில், குரல் பதிவு மூலம் தகவல் தெரிவித்துவிட்டு பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரௌபதியம்மன் அம்மன் கோவில் அருகே, மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சாந்திலால். இவர் கடந்த 10ஆம் தேதி தனக்கு, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தனியார் பரிசோதனை நிலையத்தில் வைரஸ் தொற்று பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் சாந்திலாலுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ராஜபாளையத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் குரல்பதிவு மூலம், அரசுமருத்துவமனையில் சிகிச்சை சரியாக இல்லையென்றும், ஆக்ஸிஜன் கொடுப்பதில் குறைபாடுகள் உள்ளதென்றும், தனக்கு இளைப்பு அதிகமாக உள்ளது, எனவே இன்னும் இரண்டு நாட்களில் இறந்து விடுவேன் என்றும், அனைவருக்கும் நன்றி, விடைபெறுகிறேன், வணக்கம் என்று அந்த குரல் பதிவில் டாக்டர் சாந்திலால் பேசியிருந்தார். இந்தக்குரல் பதிவு கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்ஆப், பேஸ்புக் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் சாந்திலால், சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார். டாக்டர் சாந்திலால் இறப்பதற்கு முன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக இல்லை எனக்கூறியது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எதிர்கட்சி உள்பட, பல்வேறு கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் அரசு மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், டாக்டரின் மரணம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.