மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் கிராமத்தில் கெயில் நிறுவன குழாயிலிருந்து 15 அடி உயரத்திற்கு மேல் காற்றுடன் கூடிய புழுதி வெளியேறி பகுதியை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் வியாழக்கிழமை பார்வையிட்டார் . தற்போது கெயில் நிறுவனம் சீர்காழி தாலுக்கா மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்கள் வழியாக பதித்து வருகிறது. இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதன்கிழமை மேமாத்தூரில் உள்ள கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாடு நிலையம் அருகே ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் அப்போது அருகில் இருந்த குழாயில் இருந்து 15 அடி உயரத்திற்கு மேல் திடீரென காற்றுடன் கூடிய புழுதி வெளியேறியதால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அச்சமடைந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது :-கெயில் நிறுவனம் இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கு மாதானம் முதல் மேமாத்தூர் வரையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணியின் போது காற்றுடன் கூடிய புழுதி 20 மீட்டர் உயரம் வரை பரவியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவங்கள் எதிர்வரும் காலத்தில் கெயில் நிறுவனம் பாதுகாப்பான முறையில் குழாய் அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதியாக இருந்திருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. வேளாண்மைத்துறை சார்பில் இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.