
தேர்தல் வந்தால் போதும் பிரச்சாரங்களும், விவாத மேடைகளும் பொது வெளியில் கோலாகலமாக களைகட்ட துவங்கி விடும். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் சமுக வலைதளம் மூலம் செய்யப்படும் பிரச்சாரம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலை “வாட்ஸப் தேர்தல்” என்று வெளிநாட்டு ஊடங்கள் வர்ணித்துள்ளது. ஏனென்றால் வாட்ஸப் போன்ற சமூக வலைதளம் மூலம் பரப்புரை செய்ய பிரத்யேக குழுக்களை பல்வேறு கட்சிகள் நியமித்துள்ளது.
ஒவ்வொறு கட்சியும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்ப் குழுமங்களை உருவாக்கி அதை நிர்வகிக்க அதற்கென்று தனி ஐடி டீமை நியமித்துள்ளது. அவர்கள் தேர்தல் நேரங்களில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், கடந்த கால சாதனைகளை, எதிர்க்கட்சிகளின் ஊழல்கள் மற்றும் பல்வேறு தகவல்களை கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் நொடி பொழுதில் பரிமாற இக்குழு முழு நேரமாக செயல்படுகிறது. இவ்வாறு வாட்ஸப் வழியாக பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மைத்தன்மை வாய்ந்தது என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதே நிதர்சனம்.
உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை இங்கு நடந்தது போல் சித்தரித்து பிரிவினையை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளும் உண்டு. அதே சமயம் பெரும்பான்மையான மக்கள் தனக்கு வரும் தகவல்களை சரியாக ஆராயாமல், படித்து கூட பார்க்காமல் வதந்திகளை உண்மையென்று நம்பி அப்படியே பகிர்வது ஒரு வழமையாக கொண்டுள்ளனர்.
இதனால் பிற சமூகத்திற்கு மத்தியில் பிளவு ஏற்பட்டு கலவரத்தில் முடிவதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக சில மதவாத அரசியல் கட்சிகள் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவும், பிரிவினைவாத அரசியலை முன்னிருத்தவும் வாட்ஸப் தளத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இது போன்று வன்முறையை தூண்டும் கருத்துகளை கட்டுப்படுத்தவும், தடை விதிக்கவும் எந்த வித வழிமுறைகளும் இல்லை என்பது தொழில் நுட்ப உலகில் ஒரு மிகப்பெரிய சவாலாகவும், குறைபபாடாகவும் உள்ளது.
You must be logged in to post a comment.