மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் 100சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் விதம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வாக்கு ஒப்புகைச் சீட்டுக் கருவி பயன்பாடு குறித்தும் சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டுபிரசுரங்களையும் விநியோகித்தனர். மேலும், வாக்குப்பதிவு செயல்விளக்கம் குறித்து வட்டாட்சியர் பரமசிவம் செயல்விளக்கமளித்தார். தொடர்ந்து, அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், நகராட்சி ஆணையர் அச்சையா, நகரமைப்பு அலுவலர் காஜாமுகைதீன், வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்:
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் வருவாய் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் பணி அண்ணா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் அமுதா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பரமசிவன் முன்னிலை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) சந்திரசேகர் வாகனங்களில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி, வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமிசுந்தரி, துணை வட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.