திருக்கடையூர் கோயில், ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் மோசமாக இருக்கும் நிலைமையை கண்ட அமிர்த விஜயகுமார், மாநில அமைப்பாளர், அகில இந்திய மனித உரிமை கழகம் இது சம்பந்தமாக அங்குள்ள நிலைமையை பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆட்கொல்லி வைரசான கொரோனா அகிலத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இது வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் உள்ள மருத்துவமனகள் அவசர, அவசரமாக கொரோனா சிகிச்சைக்கு தயாராகி வருகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லையென்று கூறி வரும் நிலையில் கிராமப்புறங்களில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 1421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏதுமில்லையென்பதை மறுக்க முடியாது. போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்றி செயல்பட்டு வரும் இது போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களை வைத்துக் கொண்டு கொரோனாவின் கொடிய தாக்குதலில் இருந்து கிராமப்புற மக்களை தமிழக அரசு எப்படி காப்பாற்றப் போகிறது என்பது கேள்விக்குறிதான்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்களோ செவிலியர்களோ இல்லையென்றும் இருக்கிறவர்களும் பணியில் இருப்பதில்லையென்றும் அவ்வூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாதாரண காய்ச்சல் உள்ளிட்டவற்றிற்கு மருந்துகள் வாங்க சென்றால் கூட நோயாளிகளாக வருவோரிடம் அங்குள்ள கடைநிலை ஊழியர்கள் கடினமாக நடந்து கொள்வதாகவும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதோடு நோயாளிகளை வெளியூர்களுக்கு செல்லுமாறு விரட்டியடிப்பதாகவும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மீது திருக்கடையூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அவ்வூரில் உள்ள புகழ் பெற்ற அமிராமி அம்மன் உடனுரை அமிர்தகடேசுவரர் கோயிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து சென்றுள்ள நிலையில் அவர்கள் யாரிடத்திலிருந்தாவது கொரோனா தொற்று பரவியிருக்கலாமோ என்று இங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் இங்கு இருக்கும் ஒரே ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனையளிப்பதாக திருக்கடையூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டுமென்று அவ்வூர் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களில் இதே நிலை நீடிப்பதால் உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை காப்பாற்ற வேண்டுமென்று தமிழக அரசை கிராமப்புற மக்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.