வடகரை மற்றும் வாவாநகரம் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்; விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை..
தென்காசி மாவட்டம் வடகரை மற்றும் வாவாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை அழித்து வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த தமிழக அரசும், வனத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/07/20240709_032909-large.jpg?resize=720%2C526&ssl=1)
யானைகள் அட்டகாசம் குறித்து விவசாயிகளின் உள்ளத்திலிருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது வேதனைக்குரல்..
பல விவசாய நிலங்கள் யானைக்கு தீனியாகி விட்டது. ரத்தத்தை வியர்வையாக்கி வியர்வையை தண்ணீராக்கி விவசாயம் செய்தால் அத்துனையும் அழித்து யானைக் கூட்டம் நாசம் செய்கிறது.
வட்டிக்கு பணம் வாங்கி வாழை நட்டால் குலை தள்ளும் நேரம் யானைக்கு பசியாகிறது. பட்டினி கிடந்து வாழை குலை தள்ளும் குடும்பமே பசியாரலாம் என விவசாயி நினைத்து காலம் தள்ளினால் யானைக்கு தீனியாகிறது.
அம்புட்டும் கடனை அடைக்க கடன் வாங்குவதா அல்லது விவசாயம் செய்தது போதும் என முற்றுப்புள்ளி வைக்கும் மனநிலையில் தற்போதைய விவசாயம்.
மதுவுக்கு இருக்கும் மரியாதை கூட மானம் காக்கும் விவசாயத்தில் இல்லை. விரக்தியின் உச்சியில் அச்சத்தின் விளிம்பில் போட்ட முதல்கள் ஒரே இரவில் பறிகொடுத்து விட்டு படுத்து உறங்க மனமில்லாமல் மனநோயாளி போல் நடமாடும் விவசாயிகள் பல பேர்.
தமிழக அரசும் வனத்துறையும் தயவு செய்து எங்கள் பகுதி விவசாயத்தை காப்பாற்றுங்கள்! பல விவசாயிகள் கண்ணீரை துடைக்க வாருங்கள்! யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்! என ஓங்கி ஒலிக்கிறது விவசாயிகளின் அவலக்குரல்..
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.