வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநில மக்களுக்கு, பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது சொந்த செலவில் உணவு தயாரித்து, அதை படகு மூலம் கொண்டுசென்று விநியோகித்து வருகிறார்.அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அசாம் அம்தய் தொகுதி பாஜக எம்எல்ஏ மிரினால் சாய்கியா என்பவர், தனது சொந்த செலவில் உணவு சமைத்து, அதை படகு மூலம் கொண்டுசென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து வருகிறார். இதற்காக அவர் வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதில், உணவு சமைப்பதற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்துள்ளார். மேலும், இந்த வாகனம் மூலம் நடமாடும் மருத்துவ முகாமிற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக சொந்தமாக வாகனம் வாங்கினேன். முதல்நாள் சொந்த செலவில் உணவு சமைத்து விநியோகம் செய்தேன். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்த பலர், தாமாகவே முன்வந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது, தேவைக்கும் அதிகமாக பணம் சேர்ந்துள்ளதால், ‘நன்கொடையாளர்கள் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்’ என கூறியுள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்களின் பசியை அமர்த்த வேண்டும் என்பதே எனது நோக்கம்; அவர்களுக்கு அரிசியும், பருப்பும் இலவசமாக வழங்க முடியும். ஆனால், அதை சமைத்து சாப்பிடுவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதற்காகவே சமைத்து எடுத்துச் செல்கிறேன்.அத்துடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இதனால், நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டேன். இதற்காக, அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உதவினர். அரசே, மருந்துகளை விநியோகம் செய்தது” என்றார்
You must be logged in to post a comment.