தேனி மாவட்டம் ஏ. ரவிக்குமார், ஆர்.தாரணி ஆகியோரது மகன் ஜெய் ஜஸ்வந்த், 10. கடந்த 2009 மார்ச் 21ல் பிறந்த இவர், தனது 5 வயதில் தேசிய ரோலிங் ஸ்கேட்டிங் துவங்கினார். அன்று முதல் அவர் வளர்ந்து வரும் வீரராக உருவெடுத்தார். 2016ல் நீச்சல் பயிற்சி துவங்கினார். மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தேனி மாவட்டத்தில் பதக்கம் வென்ற முதல் வீரர் ஜெய் ஜஸ்வந்த். இது அவருக்கு நீச்சலில் சாதிக்க மிகப் பெரிய ஊக்கமளித்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேனியில் 2017ல் நடந்த மிக விரைவு மினி மராத்தான் நீச்சல் போட்டியில் 4 கி.மீ., தூரத்தை 81 நிமிடங்கள் தொடர்ந்து நீந்தி, உலக சாதனை நிகழ்த்தினார். சிறப்பான இச்சாதனையே, அவரது நீண்ட தூர நீச்சல் சாதனையின் மிகப் பெரிய மைல் கல். நீச்சல் மீதான தொடர் ஆர்வத்தால் மாநில அளவிலான பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று நிறைய பதக்கங்கள் மற்றும் தனி நபர் சாம்பியன் கோப்பைகள் வென்றார்.
கர்நாடாகாவில் கடந்த பிப்ரவரி 9, 10 இல் நடந்த 2வது தேசிய திறந்த நிலை தண்ணீர் நீச்சல் சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜெய் ஜஸ்வந்த் மட்டுமே. 11 வயதிற்குட்பட்டோருக்கான இப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்ற ஜெய் ஜஸ்வந்த் கடலில் நீந்தி சாதிக்க வேண்டும் என்னும் ஆர்வத்திற்கு ஏணிப்படியாக அமைந்தது.
இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் இலங்கை தலைமன்னார் அருகே உருமலை பகுதியில் இருந்து கடலில் நீந்த தொடங்கினார். 9 மணியளவில் சர்வதேச கடல் எல்லையை கடந்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்த் , மதியம் 2.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையை வந்தடைந்தார். இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 30 கி.மீ., தூரத்தை 10 மணி 30 நிமிடங்களில் பாக்ஜலசந்தி கடலில் தொடர்ந்து நீந்தி கடந்து சாதனை முயற்சி செய்தார்.
You must be logged in to post a comment.