தென்காசி மாவட்டத்தில் பட்டு விவசாயிகளுக்கு பரிசுக் காசோலைகள் மற்றும் களை எடுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 05.04.2022 செவ்வாய் கிழமை மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு களை எடுக்கும் இயந்திரங்களையும், சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள், மல்பெரி பயிரிட்டு, பட்டுத் தொழில் மேற்கொண்டு வருகின்றனர். பட்டுத் தொழிலை மேம்படுத்தும் வகையிலும், புதிய பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தமிழ் நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு தளவாடப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், நான்கு பயனாளிகளுக்கு தலா ரூபாய் 35,000 மதிப்பில் களை எடுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பட்டு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களுக்கு பரிசுத் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் அடைக்கலப் பட்டினத்தைச் சேர்ந்த பட்டு விவசாயி சு.ஜேக்கப் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ25 ஆயிரமும், கோவிலூற்றைச் சேர்ந்த பட்டு விவசாயி வை.அருள் குமரன் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், கடையநல்லூரைச் சேர்ந்த பட்டு விவசாயி ப.முருகன் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ 15ஆயிரமும், மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வே.பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநர் ( பட்டு வளர்ச்சித்துறை) க.நிஷாந்தி, ஆய்வாளர் சி.ஜெயந்தி மற்றும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.