மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவமனை, சிகிச்சை மையங்களின் நிலை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில் 108 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தனர்.அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேஷ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில்,மதுரையில் முதல் சித்தா சிகிச்சை மையம் துவங்கப்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விரைவில் மதுரையில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,மதுரையில் மிகவும் இக்கட்டான சூழல் உள்ளது.கடந்த ஆண்டை விட இந்தாண்டு பாதிப்பு அளவு அதிகமாக உள்ளது.அரசு உருவாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் மிக விரைவாக செயல்பட்டு வருகிறோம்.அரசு மருத்துவமனை அனைத்தும் நிரம்பி விட்டது.எனவே, ஒய்வு பெற்ற மருத்துவர்கள், இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் ஆகியோரை இங்கு சிகிச்சை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.துபாய், சிங்கப்பூர், டெல்லி, ஒடிசா மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறோம்.மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.தேர்தல் காலத்தில் ஒரு நாள் கூட நான் மாஸ்க் இல்லாமல் வெளியே சென்றதில்லை.அரசு எவ்வளவு முயன்றாலும்,மக்கள் உதவினால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஓரிரு நாளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும். ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டளை மையத்தை ஆய்வு செய்தனர்.பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், பிரதிநிதிகள் உடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.
…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.