திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உலகப் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வழக்கம்போல் நடைபெறுமா? என பக்தர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.17 நாள் விழாவில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 32 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். மகா தீபத்தன்று மட்டும் 15 லட்சம் பக்தர்கள் திரண்டு, கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.கரோனா தொற்றைக் காரணம் காட்டி கார்த்திகை தீபத் திருவிழாவை, கோயிலுக்கு உள்ளேயே மிக எளிமையாக நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிள்ளதால், ஓட்டுமொத்த வணிகம் பாதிக்கும் என அனைத்து நிலை வணிகர்களும் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தரப்பில் கூறப்படுவதாவது ; கடந்த 8 மாதங்களாக பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை விதித்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவும் நடைபெறவில்லை என்றால், பேரிழப்பைச் சந்திக்க நேரிடும்.எனவே, ஆன்மிகத் திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம். சாமி வீதியுலா, மகா தேரோட்டம் என அனைத்தும் வழக்கம்போல் நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், நூற்றுக்கணக்கான டீக்கடைகள், 200 உணவகங்கள், 250 தங்கும் விடுதிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டியில் சிற்றுண்டிக் கடைகளை நடத்துபவர்கள் மற்றும் 20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அடங்குவர்.தீபத் திருவிழா தடைப்பட்டால், சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கும். ரூ.15 கோடி மதிப்பில் நடைபெறும் வர்த்தகம் முடங்கிப்போகும். எனவே, நடைபாதை வியாபாரிகள் உட்பட வணிகர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.