சீர்காழி தாலுக்கா, நாங்கூர் ஊராட்சி திருமேணிக்கூடம் பகுதியில் கெயில் குழாய் பதிக்கும் வேலைக்கு பயன்படுத்தப்படும் கம்பரசர்( compressor ) இயந்திரம் இன்று ( 14.7.2020 ) காலை 8 மணியளவில் பயங்கர சத்தத்துடன் தானாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தங்களது இயந்திரங்களையே சரியாக பராமரிக்க வக்கற்ற இந்த ONGC – யும், கெயில் நிறுவனமும் மக்களை பாதுகாக்குமா?பழையபாளையம் ONGC எண்ணெய் துரப்பண நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு செய்யப்படுவதற்காக பணங்குடியில் உள்ள CPCL எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் வரை (மேமாத்தூர் வழியாக) 29 கிலோமீட்டர் அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் வேலைகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.காவிரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டும் இத்திட்டம் நிறுத்தப்படவில்லை.பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் யாவும் விளைநிலங்கள் மற்றும் வீடுகளுக்கு அடியிலேயே செல்கின்றன. இக்குழாய்களில் கசிவு ஏற்பட்டால் பயங்கர தீ விபத்தை ஏற்படுத்தி இங்கு வசிக்கும் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கக்கூடும்.
இத்திட்டத்திற்கு எதிராக தற்போது விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே சென்ற வருடம் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு பெரும் போராட்டத்தை நடத்தி 10 நாள் வரை வேலை நிறுத்தம் செய்தனர். பிறகு மக்களின் கருத்தை கேட்டு, கருத்து கேட்புக்கூட்டம் நடத்தி இதற்கான தீர்வை தெரிவிக்கிறோம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த கருத்து கேட்புக் கூட்டம் கெயில் நிறுவனத்திற்கு சாதகமான முறையில் நடைப்பெற்றதால் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல், புறக்கணித்து வெளியே சென்றனர். போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து அராஜகமான முறையில் இந்த அரசு நடந்து கொண்டது. இந்நிலையில் இன்று குழாய் பதிக்க பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர் இயந்திரம் தானாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இது இங்கு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் லட்சணம் என்ன என்பதை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது. தனது இயந்திரத்தையே முறையாக பராமரிக்காத இந்த நிறுவனம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழாய்களை முறையாக பராமரிக்கும் என்று எப்படி நம்புவது.?எனவே இந்த பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் மேலும் பதித்த குழாய்களை அகற்ற வேண்டும்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.