Home செய்திகள் கந்த சஷ்டி கவசம் அறிவியல் மகிமை..

கந்த சஷ்டி கவசம் அறிவியல் மகிமை..

by mohan

அறிவியல் உச்சத்தில் ஆடும் தேசங்கள் மருந்தில்லா நோய்க்கு தெய்வமே துணை என சரணடைந்துவிட்ட நேரம். இந்நிலையில் தமிழர்கள் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம். அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்.கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருகபெருமான் காட்சிஅளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்கின்றான்.

அந்த இடத்தில் இருந்து பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அதுதான் கந்த சஷ்டி கவசம்.சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு. நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளபட்டது. ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல்.பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவியிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்தின வடிவேல் காக்க

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல். இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது. ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல். உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது.உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல் இது. இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது. அக்கால புலவர்கள் ஞானமிக்கவர்கள், சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீக மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான‌ சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள். தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார். ஆம் சில வார்த்தைகளை தகுந்த உச்சரிப்புடன் உச்சரிக்கும்பொழுது அது சில அதிர்வுகளை செய்கின்றது அது உடலில் நல் விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் , சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும். ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள். ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே, அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்.

முருகன் ஆலயம் பொதுவாக மலைமேல் அமர்ந்திருக்கும் அல்லது அமைக்கபட்டிருக்கும் விஷயம் ஒன்றுமில்லை, மலைமேல் இருக்கும் அந்த சூழல் மன அமைதியினை கொடுக்கின்றது, நோயில் இருந்து பாதி விடுதலையினை அதுவே கொடுத்துவிடும். மலைமேல் ஏறி செல்வதும் அங்கிருக்கும் சுத்தமான காற்றினை சுவாசிப்பதும் மாபெரும் ஆரோக்கிய வழி.குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல், பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும் நோய்கள் நெருங்கா, செங்கல் இருந்தும் மன்னர்கள் கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான். முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள.முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள் வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம் ” முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலும் நலம் பெற்று இனிது மெத்த இன்பம் சேருமே கொரோனா உலகை மிரட்டி சிதறு தேங்காயாக ஆக்கும் நேரமிது. தமிழர்கள் தங்கள் தனிபெரும் கடவுளை, அவன் கொடுத்த பாடல் வழி தேடட்டும், தமிழருக்காய் அல்ல உலக மக்களுக்காய் முறையிடட்டும். எந்த பாடலை பாடினால் உலக மக்களெல்லாம் நோயிலிருந்து விடுபடுவார்கள் என முருகனே சொன்னாரோ அந்த பாடல் பாடபடட்டும்.ஆலயத்திலும் வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ அது உருக்கமான பாடபடட்டும்.அதில் தமிழினம் பாதுகாக்கபடும், மானிட இனம் கொரோனாவில் இருந்து மீண்டெழும்.உலகெல்லாம் பிரார்த்தனைகள் ஓங்கி ஒலிக்கும் நேரம் தமிழரிடம் அவர்களின் மூலகடவுள் பாடலும் ஒலிக்கட்டும், காக்கும் சண்முகன் எல்லோரையும் காக்கட்டும்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!