திருவண்ணாமலை கோவிலில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு:- முறைகேடுகள் நடப்பதாக புகார்..!
அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. பஞ்சபூத ஸ்தலங்களை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது என்பதால் உலகம் முழுவதும் இருந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்க பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பவுர்ணமி வழிபாடுகளில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் கோவில் வருமானம் ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் உள்ளது.
இக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நிகழ்வதாக புகார் வந்ததால் அதிகாரி குழுவினர் கோவிலில் திடீர் சோதனை நடத்தினர்.
அருணாசலேஸ்வரர் கோவில் வாசலில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இலவசங்கள் என்று அறிவிக்கப்பட்ட அனைத்திற்கும் கட்டணங்கள் வசூலிப்பதாகவும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கோவில் அபிஷேகத்தில் பங்கேற்றபோது அதிக பணம் வசூலித்ததாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்த வேலூர் இணை ஆணையர் மாரிமுத்து, மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜான்சிராணி மற்றும் சென்னை அறநிலையத்துறை கமிஷனர் அலுவலக அதிகாரி ஒருவர் ஆகியோர் கொண்ட குழுவினர் கோவில் அலுவலகத்தில் ரகசிய விசாரணை நடத்தினர்.
கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கூறிய கருத்துக்களை பதிவு செய்து கொண்டனர்.
திருவண்ணாலை கோவிலுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக தக்கார் மற்றும் அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. அனைத்தையும் அதிகாரிகள்தான் கவனித்து கொள்கின்றனர். இதனால் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததால் தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே தக்கார் மற்றும் அறங்காவலர் குழு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.