Home செய்திகள் தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா : 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு ..

தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா : 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு ..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா : 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கட்டாலங்குளம் கிராமத்தில் 11.07.2019 அன்று வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 309வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. மேற்படி விழாவானது அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும்,  சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 10.07.2019 மாலை 6 மணி முதல் 12.07.2019 காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி கட்டாலங்குளம் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கட்டாலங்குளத்திலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் மற்றும் ஜோதி (விழா நிகழ்விடத்திலிருந்து 1 கி.மீ.க்கு வெளியே) கொண்டு வருவதற்கும்,

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை  உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீரன் அழகுமுத்துக் கோனின் 309-வது பிறந்தநாள் விழாவானது அமைதியான முறையிலும் சீரும் சிறப்புமாக நடைபெற மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் ஏதும் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!