தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் உடலில் காயங்களுடன் நேற்று இரவு பெண் திமிங்கல சுறா (WHALE SHARK) ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடலில் இருக்கும் மீன் வகைகளில் மிகப் பெரியது திமிங்கல சுறா. இது அதிக பட்சமாக 60 அடி நீளம் வரை வளரக்கூடியது, கடற்கரையோர மீனவர்கள் இதனை அம்மனி உளுவை என அழைக்கின்றனர்.
இது நேற்றிரவு உடலில் காயங்களுன், குற்றுயிராய் கரை ஒதுங்கியுள்ளது, இந்த தகவல் அறிந்த வனத் துறையினர் அந்த மீனை மீண்டும் கடலில் கொண்டு சென்று விட்டனர். இந்த நிலையில் மீண்டும், இன்று அதிகாலையில் இறந்த நிலையில் அந்த மீன் கரையொதுங்கியது. தகவல் அறிந்ததும் மீண்டும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று, இறந்த மீனனைப் பார்வையிட்டனர். 5.47 மீட்டர் நீளம் (சுமார் 17.5 அடி) உள்ள இந்த பெண் மீன் சுமார் 11/2 டன் எடை கொண்டது.
இதனை பார்வையிட்ட கால் நடை மருத்துவர்கள், சந்தோஷ் முத்துகுமார், ஜோல்ராஜ், அபிராமி ஆகியோர் குழு பிரதே பரிசோதனை செய்தனர். பின்னர் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மீனவ மக்கள் கூறுகையில் ” கடல் பரப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாகவே இந்த வகை மீன்கள் இறந்து கரையொதுங்கும், இதனால் சுனாமி போன்ற ஆபத்துக்கள் வரலாம் என்பது எங்களின் நம்பிக்கை, ஆகவே இதை நாங்கள் கெட்ட சகுனமாக பார்க்கிறோம், ஆனால் இந்த மீனைப் பொறுத்தவரை கப்பலில் அடிபட்ட காயங்கள் இருப்பதால் அது போன்று எதுவும் நிகழ வாய்ப்பில்லை, இது எங்களுக்கு அச்சத்தை நீக்கி ஆறுதல் அளிக்கிறது” என்றனர்
You must be logged in to post a comment.