இராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையமான செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (01.03.2019) மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு அவர் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான அரசு பொதுத் தேர்வு இன்று (01.3.19) தொடங்கி 19.3.19 வரை நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 56 மையங்களில் 143 பள்ளிகளைச் சார்ந்த 7,479 மாணவர்கள், 8368 மாணவியர், 280 தனித்தேர்வர்கள் என 16,127 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 60 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களாக 60 ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 807 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் ஆயவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலர்கள் தலைமையில் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 120 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் பார்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையற்ற, காது கேளாத, உடல் உறுப்புகளில் மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்கள் சிரமமின்றி தேர்வெழுதும் வகையில் சொல்வதை கேட்டு எழுதுபவர்கள் 13 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தேர்வெழுதும் நேரத்தில் கூடுதலாக 50 நிமிடங்கள், ஆங்கில மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதிடும் வகையில் தேவையான போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாணாக்கர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களைத் தவிர வெளியாட்கள் எவரும் தேர்வு மையத்திற்குள் நுழையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் உடனிருந்தார்.
You must be logged in to post a comment.