பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் தவணை தொகை வழங்கும் விழா பிப்., 24 ஆம் தேதி ராமநாதபுரத்தில் துவக்கி வைக்கப்பட்டது . இதன்படி மாவட்டத்தில் 3,15,315 விவசாயிகளில் 75, 534 பேருக்கு முதல் தவணை பட்டியலில் ப யனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள விவசாயிகள் குறித்த புள்ளி விவர கணக்கெடுப்பு தொடர்பாக பிப்.26ல் மாவட்ட ஆட்சி யர் வீரராகவ ராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பட்டியல் கணக்கு குறித்து தாசில்தார்கள் பொன்.கார்த்திகேயன் (ராமநாதபுரம்), தமீம் ராசா (ஆர்.எஸ் மங்கலம்), சங்கரன் (ராமேஸ்வரம்) ஆகியோரிடம் விளக்கம் கேட்டார். தாசில்தார்கள் தெரிவித்த புள்ளி விவரத்திற்கும், ஆட்சியரின் பட்டியலுக்கும் வேறுபாடு இருந்தது. இதனால் கோபமடைந்த ஆட்சியர் வீரராகவ ராவ் தாசில்தார்களின் பணியை குறை கூறி ஆங்கில வார்த்தைகளால் அவதூறு பேசினார். மேலும், ஆட்சியரின் கோபத்திற்காளான தாசில்தார் களை அங்கு கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் பக்கம் திரும்பி முகத்தை காட்டுமாறு மூக்கறுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து ஆவேசமடைந்த ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரை கூட்டத்தை தொடர்ந்து நடத்துமாறு கூறிவிட்டு அவரது அறைக்கு புறப்பட்டுச் சென்றார். இதன் பின் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தயாரான கிஷான் சம்மான் நிதி விவசாயிகள் பட்டியல் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. மன உளச்சலுக்கு ஆளான தாசில்தார்கள் ஊழியர் விரோத போக்கை கண்டிக்கும் வகையில் ஆட்சியர் அலுவலக அறை பார்வையாளர்கள் காத்திருப்பு அரங்கில் இன்று மாலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் மன்னிப்பு கோரும் வரை முற்றுகை போராட்டத்தை விலக்கி கொள்ளப் போவதில்லை என கூறி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் பழனிக்குமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் தமீம் ராசா முன்னிலையில் 248 பெண்கள் உள்பட 527 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகளிடம் பிப்.26 ல் நடந்த சம்பவம் குறித்து விளக்கினார். stupid ( புத்தி கெட்ட) என்ற வார்த்தைக்கு அகராதியை புரட்டி பாருங்கள். அதன் பொருளை தாங்கள் எவ்வாறு எடுத்து கொண்டீர்கள் என தெரியவில்லை. ஒரு தப்பை திரும்பத் தர செய்வது அதிகாரிகளுக்கு அழகல்ல. பிப்., 26 ல் நடந்த சம்பவம் தொடர்பாக உங்கள் சங்க நிர்வாகிகள் என்னிடம் வந்து விளக்கம் கோரியிருக்கலாம். அதை நீங்கள் செய்யவில்லை. மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு இணைந்து பணியாற்றுவோம் என ஆட்சியர் வீரராகவ ராவ் பேசினார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.