இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 28 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 8 வது முபல்லிகா சனது விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார்.
599 பேருக்கு இளங்கலை பட்டம், 54 பேருக்கு முதுகலை பட்டம், 10 பேருக்கு ஆய்வு நிறைஞர் பட்டங்களை எரச் அண்ட் மெஹ்ரூ மேம்பாட்டு கல்வி மற்றும் மும்பை இந்திய தொழில் நுட்ப ரசாயன பொறியியல் துறை பேராசிரியர் மேம்பாட்டுக் கல்வி தொழில்நுட்ப பேராசிரியர் முனைவர் கண்ணன் எம். மெளட்கல்யா வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் மட்டுமல்ல யார் எது செய்தாலும் அதை சரியாக, நேர்த்தியாக செய்ய வேண்டும். கல்வி, தொழில் உள்பட எதுவாக இருந்தாலும் அதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எந்த வேலையை யார் சிறப்பாக செய்வர் என ஆய்ந்து அப்பணியை ஒப்படைக்கும் அளவிற்கு நீங்கள் (மாணவிகள்) உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். பட்டப் படிப்புடன் முடிந்தது என கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நேரம் ஒதுக்கி வாசித்தால் மட்டுமே உலக விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை தகவல் தொழில்நுட்பம் வியாபித்து விட்ட இக்கால கட்டத்தில் விரல் நுனியில் உலகம் என்றாகி விட்டது. சமூக வலைதளங்களில் எண்ணற்ற தகவல் பரிமாற்றங்கள் நொடிக்கு நொடி வந்த வண்ணம் உள்ளது. நேர மேலாண்மை முக்கியம் என்பதால் எந்த காரியமானலும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடித்து விட வேண்டும். இன்றைய இந்தியா மட்டுமல்ல நாளைய இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் உள்ளது என்ற முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ஆபஜெ அப்துல் கலாமின் ஆழ்ந்த நம்பிக்கைக்கேற்ப ஒவ்வொருவரும் சிறந்த இந்திய குடிமகனாக உருவாக வேண்டும். இவ்வாறு பேசினார்.
காலையில் நடந்த 8 வது முபல்லிகா சனது விழாவில் சென்னை அல்ஹ ரமான் தொண்டு அறக்கட்டளை பொதுச் செயலாளர் அல்ஹாஜ் முகமது ரஃபி தலைமை வகித்தார். கடலூர் முபல்லிகா உஷ்தாது முகமதியா நிஸ் வான் மதரஸா ஊக்க பயிற்றுநர் கே.சர்மிளா இஸ்லாமிய மார்க்க உரையாற்றினார். திண்டுக்கல் அல் பைசுல் உலூம் முதல்வர் அஸ்ரஃபில் பயான் மெளலவி கொரி ஏ.எஸ்.எம்.முஹமது ஹரூன் சனது உரையாற்றினார். திண்டுக்கல் அல் பைசுல் உலூம் ஆலிமா ஆசிரியை ஹாஜியானி சமியா பேகம் உறுதிமொழி ஏற்றார். அரபி துறை தலைவர் பேராசிரியை ஜனபா எஸ். நஸீமா பர்வீன் அறிக்கை வாசித்தார். கல் லூரி செயலர் அல்ஹாஜ் காலித் ஏ.கே.புகாரி முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் டாக்டர் ரஹ்மத்துன்நிசா அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். துணை முதல்வர்கள், தேர்வாணையர், கலை மற்றும் அறிவியல் முதல்வர்கள், துறைத்தலைவர்கள் , பேராசிரியை கள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஜனாப் ஷேக் தாவூது கான் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.