குன்றத்தூரில் பணம் கேட்டு மிரட்டியதாக போலி நிருபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.
குன்றத்தூர், மேத்தா நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் பாலாஜி(43), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தாங்கள் பத்திரிகை துறையில் ஆசிரியர் மற்றும் நிருபர்களாக வேலை செய்து வருவதாகவும் தங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்த கடையில் தரமில்லாத பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்தி வெளியிடுவோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த 3 பேரையும் பிடிக்க முயன்றனர். போலீசாரைக்கண்டதும் 3 பேரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். இதில் இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். ஒருவன் தப்பி ஓடினான். இதையடுத்து இரண்டு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் குன்றத்தூர், மனஞ்சேரியை சேர்ந்த முனுசாமி (35), குன்றத்தூர், சரவணா நகரை சேர்ந்த செந்தில்குமார்(35), மேலும் தப்பி ஓடியவர் இளங்கோ(37), என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் : மூன்று பேரும் சேர்ந்து கொண்டு குன்றத்தூர், மாங்காடு போன்ற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், தண்ணீர் கம்பெனிகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் சென்று அந்த நிறுவனங்கள் குறித்து தவறான செய்திகள் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். மேலும் மேத்தா நகரில் விபச்சாரம் நடப்பதாக கூறி தவறான செய்தி வெளியிட்டு உள்ளதாகவும் இதுகுறித்து அந்த குடியிருப்போர் நலச்சங்கம் சார்பிலும் புகார் கொடுக்க உள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு பத்திரிகைகளில் நிருபராக வேலை செய்வதாக போலி அடையாள அட்டைகள் வைத்துள்ளனர்.
இதில் இருவர் வெளியே வேலை செய்து வந்துள்ளனர். சமூகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து தங்களுக்கும் அதுபோல் கிடைக்க வேண்டும் என்று போலியான அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ” பிரஸ்” என்ற ஸ்டிக்கர் ஒட்டி வலம் வந்து பலரை மிரட்டி பணம் பறித்து இருப்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஒரு சொகுசு கார், 1 மோட்டார் சைக்கிள், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் இவர்களுக்கு மூளையாக செயல்பட்டவர் தப்பி ஓடிய இளங்கோ என்பதும் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும், இதுபோல் போலி நிருபர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிந்தால் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட முனுசாமி, செந்தில்குமார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் சிறையில் அடைத்தனர். பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 2 போலி நிருபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.