தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 23 ஆம் தேதி அன்று சென்னையில் கோட்டை நோக்கி மறியல் போராட்டம் பொதுச் செயலாளர் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது இப்போராட்டத்தில் இராமநாதபுரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இரா சிவபாலன் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர் மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 350 பேர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்று கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இப்போராட்டம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இரா சிவபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்களது இயக்கத்தின் போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எங்கள் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் அவர்களை கல்வித் துறைச் செயலாளர் பிரதீப்யாதவ் அவர்கள் இன்று நேரில் அழைத்துப் பேசினார். அதில் தொடக்கக்கல்வித் துறைக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவுசெய்யும் முறை ரத்துசெய்யப்படும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும், சத்துணவு SMS அனுப்பத்தேவையில்லை எனவும் கூறியுள்ளார்கள்.
அதே போல் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக ஒரு நபர் குழு அறிக்கை வந்தபின் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். தொடக்கக்கல்வித் துறையை பள்ளி கல்வித்துறையோடு இணைத்ததில் சில மாற்றங்கள் செய்யப்படும் என கூறியுள்ளார்.
மாவட்ட மாறுதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கூறியுள்ளார். ஆகவே இது எங்கள் பேரியக்கத்தின் வெற்றி யாகவே நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.