8
மதுரை மாவட்டம் சந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் மதுரை மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சந்தையூரில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலில் நுழையாமல் இருக்க அருந்ததி சமூகத்தினரால் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டது. இதற்கு அதே சமூகத்தை சார்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இரு சமூகத்தினரிடையே நீண்ட நாள் பிரச்னையாக இருக்கக்கூடிய மேற்கொண்ட சுவரை இடிக்கக்கோரி அதற்கு தீர்வு காணும் விதமாக மதுரை உயர் நீதிமன்றத்தில் அதில் ஒரு பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுவரை இடிக்க உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த சுவர் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் எடுத்த பேச்சுவார்த்தையின் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக எதிர் பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு மீது கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் ஒரே சமூகத்தை சார்ந்த இரு பிரிவினருக்குள்ளே தீண்டாமையா என கண்டனம் தெரிவித்தது.
இதை தவிர தீண்டாமை என்பது எந்த வடிவில் இருந்தாலும் அதை கண்டிப்பாக ஏற்றுகொள்ள முடியாது. மேலும், கோயிலுக்குள் யாரையும் அனுமதிக்க முடியாது என்று தனிப்பட்ட முறையில் கூற யாருக்கும் உரிமையோ, அதிகாரமோ கிடையாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் பிரச்னைக்குரிய சுவர் இருக்கும் இடமானது அரசாங்கத்திற்கு சொந்தமானதா என ஆய்வு செய்து அடுத்த நான்கு வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், எஸ்.கே.கவுல் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதி உத்தரவில் மதுரை மாவட்ட சந்தையூர் ராஜகாளியம்மன் கோயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவர் விவகாரத்தில் அந்த இடம் அரசுக்கு சொந்தமானதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், தீண்டாமை சுவர் இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமானது தானா என மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் இறுதிக்குள் நேரில் ஆஜராகி அறிக்கையை தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
You must be logged in to post a comment.