இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் பொருத்தமற்ற உத்தரவு குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி கேள்வி!
“இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை” என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உயர்வானதா, நாட்டின் உச்சநீதிமன்றம் உயர்வானதா என்ற பொருத்தமான கேள்வியை எஸ்.டி.பி.ஐ. எழுப்புகிறது. தகுந்த வார்த்தைகளில் கேட்கவேண்டுமெனில், “அரசியலமைப்புச் சட்டம் உச்சநீதிமன்றத்தை விட உயர்வானதா? அல்லது உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தைக் காட்டிலும் உயர்வானதா? என்ற கேள்வி எழுகிறது.
2020-2021 ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான மருத்துவம் மற்றும் பல்சிகிச்சை பட்டப்படிப்பு மற்றும் மேற்பட்டப்படிப்புகளுக்கான ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இடஒதுக்கீடு என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு முரணாக, இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக, பல்வேறு அரசியல் கட்சிகள் தாக்கல்செய்த பல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 11 ஜூன் 2020 அன்று வழங்கிய தீர்ப்பில், “இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது சந்தேகத்திற்கு இடமளிக்கும் கேள்விகளை எழுப்பக் காரணமாக உள்ளது.
இதுசம்மந்தமாக எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசியத்தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 16(4) தெளிவாக குறிப்பிடுவது, “இந்திய குடிமக்களில் பிற்பட்ட வகுப்பினரின் நலன்கருதி அவர்களின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதில் மாநிலங்கள் முடிவெடுக்க இப்பிரிவு தடையாக இருக்கமுடியாது என்பதோடு அவர்களுக்கு அரசு வேலைகளில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் தடையாக இருக்கமுடியாது”, என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இந்திய குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள “சம அந்தஸ்து, சமவாய்ப்பு” என்ற அடிப்படை உரிமைகளின் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்கு ஒப்பாகும் என்று பைஜி குற்றஞ்சாட்டினார்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், பிற பிற்பட்ட வகுப்பினர் மற்றும் ஆதிவாசிகள் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாகும். இந்தியாவின் விடுதலைக்குப் பின் எழுபது ஆண்டுகள் என்பது இந்தியச் சமூகத்தில் காணப்படும் பாகுபாடுகளைக் களைவதற்கான மிகக்குறுகிய காலம் என்பது வெளிப்படையாகும். இந்திய உச்சநீதிமன்றம் தனது நியாயமற்ற தீர்ப்பு வாயிலாக ஜனநாயத்தின் மாண்புகளைக் காக்கத்தவறிவிட்டது என்று பைஜி குறிப்பிட்டார்.
ஏ.கே.கரீம்
You must be logged in to post a comment.