இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி சாலை ஓர மரத்தில் கார் மோதி இன்ஜினியர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். உச்சிப்புளி காமராஜ் நகரைச் சேர்ந்த கான்ட்ராக்டர் முத்துராமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன் அந்தோணிராஜ். இன்ஜினியரான இவர் கான்ட்ராக்ட் அடிப்படையில் கட்டுமான பணி செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் மகள் கீதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கீதாவை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அழைத்துச் செல்ல கோவிந்தம்மாள், அந்தோணிராஜூடம் கூறினார். இதையடுத்து அந்தோணிராஜ், தனது காரில் கீதா, கோவிந்தம்மாள் மற்றும் உதவிக்காக எதிர் வீட்டில் வசிக்கும் பரமேஸ்வரியை ஏற்றிக் கொண்டு 4 பேரும் இராமநாதபுரம் புறப்பட்டனர். உச்சிப்புளி கடற்படை விமான தளம் அருகே வட்டான் வலசை சுடுகாடு பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரமிருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் முற்றிலும் சேதமடைந்த காருக்குள் சிக்கிய 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்தோணிராஜ் 108 ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். அந்தோணி ராஜூக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் ராமநாதபுரத்தில் திருமணம் நடந்தது. தற்போது இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2018/09/65FFA733-6399-4733-9C62-EBEB7820290D.jpeg?resize=1024%2C768)
You must be logged in to post a comment.