தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுவதில் விடுபட்டு போனவர்கள் வரும் 10, 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் தகவல் தெரிவித்தால் உதவித் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கோவிட் – 19 கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலினை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசால், தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000ம் ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே வழங்க ஆணையிடப்பட்டது.
இத்திட்டமானது தென்காசி மாவட்டத்தில் 29.06.2020 முதல் செயல்படுத்தப்பட்டு 13,810 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000ம் ரொக்க நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது வரை ரொக்க நிவாரணம் பெறாத தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் வருகின்ற 10.08.2020, 12.08.2020 மற்றும் 13.08.2020 ஆகிய மூன்று தினங்களில் தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் 04633 290548 அல்லது 9443621240 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு தொடர்பு கொள்ளும் தகுதியான நபர்களுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம் ரொக்க நிவாரணத் தொகை ரூ.1000ம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.