மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காக்களில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, கோடைப்பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் பருத்தி பயிர்செய்யப்பட்டிருந்தது. இந்த பருத்தியை மூட்டைகளாக கட்டி, மயிலாடுதுறை, செம்பனார்கோயில், சீர்காழி, குத்தாலம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள மின்னனு தேசிய வேளாண் விற்பனை சந்தையில் விற்பனை செய்து வந்தனர். அதிக அளவு பருத்தி வரத்து காரணமாக, வாரத்தில் ஒருநாள் மட்டும் செயல்படும் இந்த விற்பனைக்கூடங்களில், 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது. மயிலாடுதுறையில் கடந்த சனிக்கிழமை 839 டோக்கன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், ஈரப்பதம் 12க்கு கீழ் உள்ள பருத்திக்கு மத்திய அரசின் ஆதாரவிலையான குவிண்டால் 5,200ரூபாயை விட மிகக்குறைவாக 3,500ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் தனியார் மில் ஏஜென்ட்டுகள் இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில், இன்று செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில், இன்று மாலை திடீரென்று பெய்த மழை காரணமாக, 900 குவிண்டால் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. இதனால் குறைந்தபட்ச ஆதார விலையை பெற முடியாமல் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஈரப்பதம் இன்றி பருத்தியை கொள்முதல் செய்ய கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.