தென்காசியில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சங்கத்தின் நிர்வாகிகள் அன்பரசு வடிவேல் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெ.சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் துரைசிங் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.
- தமிழகஅரசு அரசுத்துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்.
- தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை அரசு கைவிட வேண்டும்.
- அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது.
- பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது.
- அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி உரை நிகழ்த்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாடசாமி, ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தின் சார்பில் ஜி. சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இறுதியில் தென்காசி வட்டார அரசு ஊழியர்கள் சங்கத்தின் கிளை செயலாளர் சேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.