பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3277 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆகவும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் மருத்துவர்களும் அடங்குவர். இதற்கு பாகிஸ்தான் அரசு மருத்துவர்களுக்கு முறையான முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்ட நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் தடியடி நடத்தி மருத்துவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து தெரிவித்த மருத்துவர் ஒருவர், ‘நாங்கள் சில வாரங்களாக எங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால், எங்கள் உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.