கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில், அதைப்பற்றி கவலைப்படாத மதுரை மக்கள் மட்டன்,சிக்கன் வாங்க நெல்பேட்டை பகுதியில் குவிந்தனர். முககவசம் அணிந்து ஒவ்வொருவருக்கும் மூன்று அடி இடைவெளி நிற்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள் பொருள்களை முண்டியடித்துக்கொண்டு வாங்கினர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசின் இந்த உத்தரவை மதுரை மக்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வேதனையின் உச்சகட்டம். 3 அடி இடைவெளி விட்டு சாக்பீஸால் சமூக விலகல் கோடு வரைந்து அந்த கோட்டுக்குள் நின்று ஒவ்வொருவராக விற்பனை செய்ய வேண்டும் என்ற இந்த உத்தரவை கடைக்காரர்களும் மதிக்கவில்லை. காய்கறி மற்றும் இறைச்சி மீன்களை விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி கொடுத்து தெருத்தெருவாக விற்பனை செய்ய அனுமதித்தால் இந்த முண்டியடித்து வாங்கும் மக்களை கட்டுப்படுத்தலாம்.
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் யானைக்கல் தரைப்பாலம், கீழமாசி வீதி, தெற்குவெளிவீதி பகுதிகளில் தற்காலிக சந்தை துவக்கப்பட்டது. இதிலும் மதுரை மக்கள் விதிமுறைகள் பின்பற்ற வில்லை. பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. முந்தியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர் பொதுமக்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றாததால் கீழமாரட் வீதி, நெல்பேட்டை, தயிர் மார்க்கெட், சந்தைகள் மூடப்பட்டு விட்டது. மேலும் காவல் துறையினரின் வெளியே வரவேண்டாம் என்ற கோரிக்கையை நிராகரித்து பைக்கில் கூட்டம், கூட்டமாக ஊர் சுற்றுகின்றனர். மதுரை மக்கள் தொடர்ந்து அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் கொரோனாவின் பிடியில் இருந்து மதுரை மக்கள் தப்ப முடியாது என்பதே உண்மை.
மதுரை செய்தியாளர் கனகராஜ்
You must be logged in to post a comment.