சிஏஏ தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்:- மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்..
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், இஸ்லாமிய அமைப்புகளுடன் தலைமைச்செயலாளர் சண்முகம் நடத்திய கூட்டத்தில் என்ன விளக்கம் அளிக்கப்பட்டது என்பதை தெரிவிக்க கோரினார். சி.ஏ.ஏ. விவகாரத்தில் தனிப்பட்ட அமைப்பை மட்டும் அழைத்து கருத்து கேட்காமல், அனைத்து கட்சிகளையும் அழைத்து கருத்து கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இதுதொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதிலளித்த வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இஸ்லாமிய அமைப்புகளிடம் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி குறித்து கருத்துகள் கேட்கப்பட்டதாக தெரிவித்தார். மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டதாகவும் அமைச்சர் பதிலளித்தார். இந்தியாவில் உள்ளவர்களுக்கு சி.ஏ.ஏவால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியிருப்பதாகவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது 2010ல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை போன்றதுதான் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என முதலமைச்சர் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் தேவையா ? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.