தனது தோல்வியைமறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஊடங்கள் மீது பாய்கிறது:- டியூஜே மாநிலத் தலைவர் டி.புருஷோத்தமன் கடும் கண்டனம்!
டெல்லியில் நடைபெற்ற வன்முறைகளை படம்பிடித்து நேரடி ஒளிபரப்பு செய்த ஏசியா நெட் நியூஸ், மீடியா 1 சேனல் ஆகியவற்றிக்கு தடை விதித்த மத்திய அரசின் செயலானது, அந்த கலவரத்தை தடுக்க தவறிய தோல்வி பயத்தால் வந்த விளைவாகும் என கூறியுள்ள டி.யூ.ஜே. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க(டி.யூ.ஜே.) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது செவ்வாய் கிழமை அன்று (பிப்.25) நடைபெற்ற வன்முறைகளால் 47 பேர் உயிரிழந்தனர். பலர் துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகி கவலைக்கிடமான நிலையில் இன்றும் சிகிச்சையை தொடர்ந்துவருகின்றனர். இந்த தாக்குதலில் 5 ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோரமான வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆவார்கள். மேலும், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பல்களுக்கு தொடர்பு உண்டு, இதை டெல்லி உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி உள்ளது. இந்நிலையில் இந்த கோர சம்பவத்தை, சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் இருந்த, நமது தேசத்தின் முதல் குடிமகனான ஜனாதிபதியோ, துணை ஜனாதிபதியோ, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ கண்டிக்காதது மட்டுமல்ல, அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல்கூட கூறவில்லை என்பது வெட்கக்கேடான உண்மை. இந்த கோர வன்முறைகளுக்கு காரணமான பா.ஜ.க.வினர்மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை இரவு 11 மணிக்கு அவசர அவசரமாக ஹரியானா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றியுள்ளது மத்திய அரசு. இந்தியாவின் இதயபகுதியான டெல்லியில் நடைபெற்ற இந்த கோர வன்முறைகளை ஒடுக்காமல், டெல்லி காவல்துறையும் அதனுடைய தலைமை பீடமான உள்துறையும் வேடிக்கை பார்த்தது இதன் உச்சக்கட்டம். இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கவேண்டும். குஜராத் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த, இவர்களிடம் இந்த நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இந்த கோர வன்முறையை தடுக்க தவறிய மத்திய அரசு, தங்களுடைய இயலாமையை மறைக்க ஊடகங்கள் மீது பழியைப்போட்டு தப்பிக்க பார்க்கிறது. இந்த வன்முறை சம்பவங்களையும், துப்பாக்கி சூடுகளையும், சொத்துக்கள் சூறையாடப்பட்டதையும், குடியிருப்புக்கள் கொளுத்தப்பட்டதையும், மக்களின் முன் அம்பலப்படுத்திய ஏசியா நெட் நியூஸ் மற்றும் மீடியா 1 சேனல் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களுக்கும், அனைத்து ஊடகவியளாலருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியூஜே) தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்த ஊடகங்களுக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டிய மத்திய அரசு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய கருத்து சுதந்திரத்திற்கு எதிராக, சட்ட விதிமுறைகளை காரணம் காட்டி 48 மணி நேரத்திற்கு இவற்றின் ஒளிபரப்பை தடைசெய்து உத்தரவிட்டது. ஊடகங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தனது உத்தரவை விலக்கிக் கொள்ள நேர்ந்தது. இந்த மோசமான சம்பவத்தை ஊடக சமூகத்தின் சார்பில் டி.யூ.ஜே. வன்மையாக கண்டிக்கிறது. ஊடகங்களை பாதுகாக்கவும், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும், ஊடகவியளாலரை பாதுகாக்கவும் என்றென்றும் டி.யூ.ஜே. துணை நிற்கும் என்ற உறுதியை டி.யூ.ஜே. அளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். ……….
You must be logged in to post a comment.