மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் தமிழக,கேரள இஸ்லாமிய அமைப்பினர் கூட்டாக சந்திப்பு..
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்கள் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை இன்று (05.03.2020) சென்னையில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த மக்கள் நீதிமய்யத்திற்கும், அதன் தலைவர் கமல்ஹாசனுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில் அமைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கமல்ஹாசனிடம் கேட்டுக் கொண்டனர். அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பதாக உறுதி கூறினார்.
மேலும் கூறிய மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் உறுதியாகவும், வலிமையாகவும் நடந்திட வேண்டும்.அதே நேரம் எந்த வகையிலும் வன்முறை புகுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் இறையடியார் காஜா முகைதீன், அஹ்லுஸ்ஸூன்னத் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அக்ரம்கான், அமைப்பாளர் மெளலவி சுலைமான் மன்பயி, மாநில உலமாக்கள் பேரவை மெளலவி நஜீர் அஹமது காசிமி,சுன்னத் ஜமாத் பேரமைப்பு மெளலவி சையத் பிலால் ஆமிரி, ஹிமாயத்துல் முஸ்லிமீன் எம்.எஸ்.அப்துல்லா, ஜெ.முனீர்ஜான், திருவொற்றியூர் ஜாமியா மஸ்ஜித் செயலாளர் டாக்டர் சதக்கத்துல்லா, புளியந்தோப்பு மஸ்ஜித் கூட்டமைப்பு மெளலானா சிராஜுதீன், சுன்னத் ஜமாத் பேரியக்கம் எம்.பி.நாசர், கீழக்கரையைச் சேர்ந்த சாகுல்ஹமீது,நிஜாம், முஜாஃபிர்,பள்ளி முதல்வர் ஷெரிஃபா,AMR ரபீக் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில் சென்னை மலபார் முஸ்லிம் அசோசியேசன் ஆகிய தமிழக,கேரள முஸ்லிம் அமைப்பினர்கள் கூட்டாக கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.