கணினித் துறையில் புரட்சி செய்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 24, 1955)..
ஸ்டீவ் ஜாப்ஸ் பிப்ரவரி 24, 1955ல் சான் பிரான்சிசிக்கோ நகர், அமெரிக்காவில் பிறந்தார். ஸ்டீவ் ஜொப்ஸ், திருமணம் ஆகாத இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பிறந்தார். கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளர் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர். ஜொப்ஸ் தத்து எடுத்த சில மாதங்களிலேயே, அவருடைய பிறப்புப் பெற்றோர் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அப்பெண்குழந்தை தான் வளர்ந்த மங்கை ஆன பின்னரே தன் அண்ணனைப் பற்றி அறிந்தாள்.
1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவக் காரணமாக இருந்தது.
ஸ்டீவ் ஜொப்ஸ், 1970களின் பிற்பகுதியில் ஸ்டீவ் வோசினியாக் (Steve Wozniak), மார்க் மார்குலா (Mike Markkula) ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு (Macintosh) கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 1985 இல் ஆட்சிப் பேராயத்தாருடன் மோதி, ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி நெக்ஸ்ட் (NeXT) என்னும் கணினித்தளம் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின், ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். அங்கு முதன்மை செயலாட்சியராக (CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார்.
ஆப்பிள் உலகின் மிகப்பெரிய பிரபலமான நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் பின்னணியில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் உலமெங்கும் பலரால் விரும்பப்பட்டவராக, கணினித் துறையில் அவர் செய்த புரட்சிகளுக்காக போற்றப்படுவராக இருந்து வருகிறார். அவர் கண்ட கனவும் அதற்காக அவர் எடுத்த முயற்சிகளும் பிரம்மிக்கவைப்பவை. ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு தொழில்முனைவராக, கண்டுபிடிப்பாளராக, தொழில்நுட்பத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறார்.
2005ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.
1.நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, “மெகின்டோஷ்’ கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், “டைப்போகிராபி ‘(அச்சுக் கலை) கொண்டது.
2.நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என் நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் “நெக்ஸ்ட்’ மற்றும் “பிக்ஸர்’ ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. “பிக்ஸரில்’ முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான “டாய் ஸ்டோரி’ உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், “நெக்ஸ்ட்டை’ வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.
3.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்’ என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள்.
புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார்.
ஆனாலும் முன்கூட்டியே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.
அந்த நண்பர்கள் மூலம் இன்னும் பலருக்கும் தகவல் பரவ, அடுத்து வந்த நாட்களில் தினசரி நண்பர்கள் அவரது பாலோ ஆல்டோ இல்லத்துக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள்.
குறிப்பாக அவர் தனது ராஜினாமாவை அறிவித்த நாளிலிருந்து ஏராளமான நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனராம். ஸ்டீவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவருக்கு பிரியா விடை கொடுத்துச் சென்றவண்ணம் இருந்தனராம் இந்த நண்பர்கள்.
தான் வாழும் காலத்திலேயே எல்லாருக்கும் நல்ல முறையில் குட்பை சொன்ன திருப்தி ஸ்டீவுக்கு. வருகிற நண்பர்களை வரவேற்று, நன்றி சொல்லி அனுப்பக் கூட முடியாத அளவுக்கு களைத்துப் போனாராம் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லூரென்.
இறுதி நாள் நெருங்க நெருங்க, தன் வீட்டில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு மெலிந்து பலவீனமாகிவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஆனாலும் யார் யாருக்கெல்லாம் தன் இறுதிப் பயணம் குறித்த சொல்லி விடைபெற வேண்டும் என்பதை மனதுக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டாராம். தனது நெருங்கிய நண்பரும் உடல்நல ஆலோசகருமான டீன் ஆர்னிஷை ஒரு நாள் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தாராம். தனது மற்றொரு நண்பரும் வென்சர் கேபிடலிஸ்டுமான ஜான் டோர், ஆப்பிள் போர்டு உறுப்பினர் பில் கேம்ப்பெல், டிஸ்னி நிறுவன தலைமை நிர்வாக ராபர்ட் ஏ ஐகர் என ஒவ்வொரு நாளும் ஒருவரை அழைத்து தன் மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆப்பிள் ஐஃபோனின் லேட்டஸ்ட் பதிப்பான 4 எஸ் மாடலை வடிவமைத்தவர்கள், நிர்வாகிகளையும் அழைத்து அதை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என கடைசியாக அறிவுரைகள் தந்துள்ளார்.
ஆனாலும் தனது பெரும்பாலான நேரத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலழித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை எழுத வால்டர் ஜஸாக்ஸன் என்பவரையும் பணித்திருக்கிறார்.
இன்று ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் 6.5 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர். கூடவே உலகின் மிகப்பெரிய முன்னோடி மனிதரான ஒருவரின் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு வந்திருக்கிறது.
ஸ்டீவ் ஒரு நிமிடத்தைக் கூட வீணடித்ததில்லை. காரணம் ஏற்கெனவே அவரது வாழ்நாளின் முடிவு தெரிந்து விட்டதால், தனக்கு வேண்டாத ஒரு விஷயத்திலும் மனதைச் செலுத்தியதில்லை. கடைசி நாள் வரை, தன் வாழ்க்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படியும், தான் செய்ய விரும்பியதைச் செய்து முடிக்கும் வகையிலும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் கேன்சரில் பாதிக்கப்பட்டு, விடுமுறையில் இருந்தபோது, அவருக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து அழைத்துள்ளனர். ஆனால் அவை எதையும் ஏற்க மறுத்துவிட்டாராம் ஸ்டீவ்.
நண்பர்கள் தொடர்ந்து அவரைப் பார்த்து வந்தாலும், இறுதி வாரங்களில் ஸ்டீவ் ஜாப்ஸின் வீடு முழுக்க செக்யூரிட்டிகள் மயமாக இருந்ததாம். கேட் பூட்டப்பட்டு, எப்போதும் இரு கறுப்பு நிற சொகுசு வாகனங்கள் தயாராக இருந்தன. வேறு யாராலும் அவரைப் பார்க்க முடியவில்லை.
அக்டோபர் 5, 2011 திங்கள் அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார்.கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டன. அந்த இடம் முழுக்க மலர்கள், ஒரு வாய் கடிக்கப்பட்ட ஆப்பிள்கள், மலர் வளையங்கள் என நிரம்ப ஆரம்பித்துவிட்டன.
ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை ஒரு பெரிய சாதனையாளராக, கண்டுபிடிப்பாளராக கருதி நடந்து கொண்டதே இல்லை. ஒரு சாதாரண மனிதனை விட பல மடங்கு இயல்பாக அனைவரிடமும் நடந்து கொண்டார். அன்பு காட்டினார். அவர்களின் தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுதான் இந்தத் துறையில் யாருக்கும் கிடைக்காத புகழ், பெருமை, மக்களின் அன்பை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது.
தகவல்:இரமேஷ், உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
You must be logged in to post a comment.